தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர். இவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுசுடன் திருச்சிற்றம்பலம் படத்துடன் கைகோர்த்துள்ளார். மேலும் இந்த படத்தில் அனிருத் மற்றும் தனுஷ் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தைக் காண ஆவலாக இருந்தனர்.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வாரம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தனுசின் கடைசி சில படங்கள் பெரிய அளவில் பேசப்படாத நிலையில், திருச்சிற்றம்பலம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது எனச் சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியாகி மூன்று நாட்களில் தனுசுககு ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. உணவு டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் மற்றும் அவரது தோழியாக நித்யா மேனன் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் ரசிகர்களை அதிக அளவு ஈர்த்துள்ளதாகவும், பழைய படங்களில் நடித்த தனுசை இந்த படத்தில் பார்க்க முடிந்ததாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் “திருச்சிற்றம்பலம் ஒரு அழகான படம். படத்தின் கதை ஓட்டம் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. நித்யா மேனன் கதாபாத்திரமும் அவர் நடித்திருந்த விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது. எப்போதும் போல் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி அருமையாக இருந்தது”. மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் எனப் படத்தில் பணியாற்றிய அனைவரும் தன் அன்பைத் தெரிவித்துள்ளார்.







