விஜய் மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், இயக்குநர் அட்லி ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான். தற்போது 11-வது நாள் வசூல் விவரத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகம் முழுவதும் இரண்டாவது வார இறுதி நாள்களை கடந்துள்ள நிலையில், ரூ. 858.68 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் அட்லி இணைய நேர்காணல் ஒன்றில், “விஜய், ஷாருக்கான் இருவரும் இணைந்து என் படத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறி கதையைத் தயார் செய்யச் சொன்னார்கள். என் பிறந்தநாள் வாழ்த்துக்காக சொல்கிறார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், விஜய் சார் அடுத்த நாளே எனக்கு ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க விருப்பம் தான் என குறுச்செய்தி அனுப்பினார்.
ஷாருக்கானிடம் சொன்னபோது, இது தீவிரமான முடிவாக இருந்தால் நல்ல கதையை உருவாக்குங்கள் நான் இணைந்து நடிக்க தயார் எனக் கூறினார். அதனால், விரைவில் அதற்கான வேலைகளைத் துவங்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.







