தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த திமுக எம்பி பி. வில்சனின் கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர் சேர்க்கை:
இந்தியாவில் உள்ள மத்திய அரசின் தொழில்நுட்ப கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் நேரடியாக சேர்ந்து கல்வி பயில்வதற்கான Direct Admission of Students Abroad (DASA) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் தொடர்பாக பி. வில்சன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரது கேள்விக்கு மத்திய உயர்கல்வித் துறை எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
அதில், 2021-22 கல்வியாண்டில் திருச்சியில் உள்ள என்ஐடி நிறுவனத்தில் யுஜி பட்டப்படிப்பில் 99 வெளிநாட்டு மாணவர்களும், பிஜி படிப்பில் 2 வெளிநாட்டு மாணவர்களும் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் 5 வெளிநாட்டு மாணவர்களும், சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஒரு வெளிநாட்டு மாணவரும் DASA திட்டத்தின் கீழ் சேர்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கல்வி தவிர்த்த பிற பட்டப்படிப்புகளுக்கு DASA திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் திட்டம் இல்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு திட்டம்:
மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு திட்டமான ஷியாமபிரசாத் முகர்ஜி கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பி. வில்சன் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு கிராமப்புற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கிராமப்புற வளர்ச்சித் துறை பதில் அளித்துள்ளது.
அதில், இந்த திட்டத்தின் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ரூ.2,433.37 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 171.44 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஷியாமபிரசாத் முகர்ஜி கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருப்பூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கிராமப்புற வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.









