“பூமித்தாய்னு சொல்லாம பூமி தந்தைன்னு சொல்லியிருந்தா ஒருவேளை…” கனிமொழி எம்.பி

“பூமித்தாய்னு சொல்லாம பூமி தந்தைன்னு சொல்லியிருந்தா ஒருவேளை இயற்கைய அழிக்காம இருந்திருப்போமோ என்னவோ!” என திமுக எம்.பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார். காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு ( IPCC ) அண்மையில் வெளியிட்டுள்ள…

“பூமித்தாய்னு சொல்லாம பூமி தந்தைன்னு சொல்லியிருந்தா ஒருவேளை இயற்கைய அழிக்காம இருந்திருப்போமோ என்னவோ!” என திமுக எம்.பி கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு ( IPCC ) அண்மையில் வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் 2021 என்கிற அறிக்கை குறித்து தமிழ்நாடு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.

திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, விசிக எம்.பி திருமாவளவன், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, வேல்முருகன் எம்.எல்.ஏ ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் பேசிய கனிமொழி எம்.பி, “தற்போது உள்ள காலநிலை மாற்றம் என்பது நாம் சாதாரணமாக கடந்து போக கூடிய நிலையில் இல்லை. இது நமது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியை பாதிக்கக்கூடிய சுழலை உருவாக்கிவிடும். IPCC ஆய்வு அறிக்கையில் கடலோர பகுதிகள் வெப்ப மயத்தின் காரணமாக பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த காலநிலை மாற்றத்தை கண்காணிக்க பட்ஜெட்டில் தனி நிதியை ஒதுக்கியுள்ளது.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பூமித்தாய்னு சொல்லாம பூமி தந்தைன்னு சொல்லியிருந்தா ஒருவேலை இயற்கைய அழிக்காம இருந்திருப்போமோ என்னவோ!” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனையடுத்து பேட்டியளித்த திருமாவளவன், “மனிதக்குலத்தின் செயல்பாடுகள் காரணமாக, புவி வெப்பமாதல் ஏற்படுகிறது. புவி வெப்பமாதலால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க சட்டமியற்ற வேண்டும் என கோரிக்கைகள் என்னிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசப்படும். பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகள் பாடப்புத்தகத்தில் சேர்த்து பயிற்றுவிக்க வேண்டும்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு, அமெரிக்காவின் கண்காணிப்பு மற்றும் உளவறியும் அரசியலே காரணம். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள், உலக நாடுகளின் பொருளாதாரத்தையும்,அரசியலையும் தீர்மானிக்கின்றனர். அதே போன்று தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்திற்கும் ஒரு தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு அரசு காலநிலை மாற்றம் தொடர்பாக பல தரப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.