தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது.  சைவத்தையும், தமிழையும்…

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது.  சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும்.

இதில் 11 -ம் திருநாள் அன்று  ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.  அந்த வகையில், இவ்விழா கடந்த 20ஆம் தேதி ஶ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்களாக நடைபெற்றது.

திருவிழாவின் 11ம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச விழா நேற்று இரவு
கோலாகலமாக நடைபெற்றது.  அதன்படி தருமபுர ஆதீனம் ஆபரணங்கள் அணிந்த நிலையில், சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.  தொடர்ந்து, சிவிகை பல்லக்கினை 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.

அலங்கரிக்கப்பட்ட யானைகள்,  குதிரைகள்,  ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன் நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க மயிலாட்டம்,  கரகாட்டம்,  பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.   இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.  இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.