துள்ளுவதோ இளமை திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் தொடங்கிய தனுஷின் பயணம் இன்று நினைத்து கூட பார்க்க முடியாத உயர்த்திற்கு சென்றதுள்ளது. அதற்கு அவர் சினிமாவின் மீது வைத்துள்ள தீராக காதல் தான் காரணம் என்று சொன்னால் மிகையாகாது. நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என தமிழ் சினிமா தொடங்கி ஹாலிவுட் வரை தன்னுடைய தடத்தை பதிவு செய்துள்ளார் தனுஷ். ஆனால் அது எளிதில் கிடைத்ததல்ல.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படம் 2002 இல் வெளியானது. தனுஷ் அந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். ஒல்லியான தேகத்துடன் ஹீரோவுக்கான எந்த தகுதியும் தனுஷிடம் இல்லை என வெளிப்படையாகவே பலர் தனுஷை விமர்சனம் செய்தனர். அதனை எல்லாம் எதிர்கொண்டு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் பெருமைகளை இன்று ஹாலிவுட் வரை கொண்டு சென்றுள்ளார். அன்று யாரால் விமர்சனங்களுக்கு உள்ளானாரோ இன்று அவர்களே தனுஷ் படத்தை வெளியிட கேட்பதாக தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்த முதல் திரைப்படமான துள்ளுவதோ இளமை வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில் நாளை மீண்டும் திரையரங்கில் வெளியாக உள்ளது. தனுஷ், ஷெரின், அபிநய், ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முழுக்க, முழுக்க டிஜிட்டலாக மாற்றப்பட்டு துள்ளுவதோ இளமை திரைப்படம் நாளை ஜுலை 8 ஆம் தேதி சென்னை, கோவை உள்ளிட்ட சில குறிப்பிட்ட திரையரங்கில் வெளியாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு துள்ளுவதோ இளமை வெளியாவது தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமா ரசிகர்களுக்கே கொண்டாட்டமாக மாறியுள்ளது. thulluvadho ilamai
– தினேஷ் உதய்