விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாத பிறப்பு அமாவாசை தினத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். மேலும் 18 சித்தர்களும் இங்கு வந்து இந்த சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ததாகவும் ஏராளமான சித்தர்கள் அரூபமாக
இப்பகுதியில் சுற்றியும் வருகின்றனர்.
இத்திருக்கோவிலுக்கு செல்ல மதுரை மாவட்டம் சாப்டூர், விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை ஆகிய இரு வழிகள் இருந்தாலும் பிரதான வழியாக விருதுநகர் மாவட்டவழியாக செல்லும் தாணிபாறை பாதையையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வருடம் முழுவதும் திருக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கிற்க்கு பின் மாதம் தோறும் பிரதோஷம், சிவராத்திரி அமாவாசை, பௌர்ணமி, ஆகிய தினங்கள் மட்டுமே பக்தர்கள்
மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆடி மாத முதல் (பிறப்பு) அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர். காலை 7 மணி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையேறும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கக் கூடாது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்ற கடும் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.அடுத்த மாதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை
திருவிழா கொண்டாடப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.






