அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி கேரள மாநில திமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவனந்தபுரம் கோவளம் அரசு விருந்தினர் மாளிகையில் கேரள மாநில திமுக அமைப்பாளர் கே ஆர் முருகேசன் தலைமையில் கேரள திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கேரள மாநில திமுக சார்பாக வலியுறுத்துகிறோம். கேரள மாநிலம் முழுவதும் உள்ள 14 மாவட்டங்களிலும் ஒரு வருடத்திற்குள் கருணாநிதியின் சிலையை நிறுவ வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
மேலும், கேரளாவில் உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் கேரள திமுக சார்பாக தலைமை கழகத்தின் அனுமதி பெற்று போட்டி. கேரள மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையில் ஹிந்தி மொழியை கட்டாயம் ஆக்கக்கூடாது என்று மத்திய அரசு அலுவலகங்களில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு எதிர்த்து கேரள மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க கேரள மாநில் திமுகவின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







