டெங்கு பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…

தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக டெங்கு நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை  தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அறிக்கை தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டெங்கு பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், டெங்கு மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 2,715 தற்காலிக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும், டெங்கு பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாகவும் புகை போடுதல், கொசு ஒழிப்புக்கு மருந்து தெளிப்பு உள்ளிட்ட நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதே போல் சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 52 பேர் மட்டுமே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை நான்கு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.