நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை இடமாற்றம்
செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கும்
போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனை, தற்போது மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூர்
பகுதியில், புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று இடமாற்றம்
செய்யப்பட உள்ளது. நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை முழுவதும் ஒரத்தூருக்கு
இடம் மாற்றுவதை கண்டித்து, பாஜகவினர் இன்று மருத்துவமனை முன்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,
தேசிய செயற்குழு உறுப்பினர் வரதராஜன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்
நேதாஜி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். நாகை
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் தொடர்ந்து
செயல்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனை கட்டிடங்களை மருத்துவ கிடங்காக
மாற்றக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற பாஜகவினரை
போலீசார் ஓரமாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தினர். அப்போது,
காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கும் பாஜகவினருக்கும்
இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதனால், காவல்துறையை கண்டித்து
சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார்
நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
—கு. பாலமுருகன்







