நாகார்ஜுனாவின் Convention Centre இடிப்பு – #BhagwatGeetaல் சொன்னபடி நடவடிக்கை என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேச்சு!

நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபம் இடிக்கப்பட்டது குறித்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பகவத் கீதையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாதப்பூரில் உள்ள N-Convention அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில்,…

நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபம் இடிக்கப்பட்டது குறித்து பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பகவத் கீதையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாதப்பூரில் உள்ள N-Convention அரங்கு 27 ஆயிரம் சதுர அடியில், 3000 பேர் அமரக் கூடிய வகையில் நிறுவப்பட்ட ஒரு பிரம்மாண்ட அரங்காகும். N Convention என்ற பெயரிலான இந்த அரங்கை N 3 என்டர்ப்ரைசஸ் கட்டியெழுப்பியது. இந்த N 3 என்டர்ப்ரைசஸ் நடிகர், தயாரிப்பாளர் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் நல்லா ப்ரீத்தம் இணைந்து நடத்தும் நிறுவனம்.

இந்நிலையில் ஆக. 24 அன்று காலை 11 மணியளவில் அரங்கத்துக்கு வந்த ஹைதராபாத் பேரிடர் மீட்பு, இயற்கை அரண்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு முகமை (HYDRAA) கட்டிடத்தை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. N Convention அரங்கம் தும்மிடிகுண்டா ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் மழை நீர் வடிகால் தடைபட்டு மழை பெய்யும் போதெல்லாம் 100 அடி சாலை, ஐயப்பா காலனி மற்றும் பிற பகுதிகள் வெள்ளக்காடாக ஆகின்றன என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக நாகார்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “N-Convention அரங்கு சட்டவிரோதமான முறையில் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். எனது நற்பெயரைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தை மீறி நாங்கள் எந்தச் செயலையும் செய்யவில்லை என்பதை தெரிவிக்கும் வகையிலும் சில உண்மைகளை பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த நிலம் பட்டா நிலம். ஒரு அங்குல நிலம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை.

தனியார் நிலத்தின் உள்ளே கட்டப்பட்ட அந்த கட்டிடத்தை இடிக்க சட்டவிரோதமான முறையில் நோட்டீஸ் பிறப்பிக்க தடை உத்தரவு உள்ளது. ஆனால், தவறான தகவலின் அடிப்படையில் இன்று அந்த கட்டிடம் இடிக்கப்பட்டுவிட்டது. இன்று காலை கட்டிடம் இடிக்கப்படுவதற்கு முன் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்த கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால், சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் நானே அதனை இடித்திருப்பேன்.

நாங்கள் தவறான கட்டுமானத்தை மேற்கொள்ளவில்லை. ஆக்கிரமிப்பில் ஈடுபடவில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறேன். அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தவறான இந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த நிவாரணத்தை நாங்கள் கோருவோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் இஸ்கான் அமைப்பு சார்பில் நடத்த ஜன்மாஷ்டமி விழாவில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர்  ரேவந்த் ரெட்டி தெரிவித்ததாவது..

” தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம் என்பதைத் தான் மகாபாரதம் வாயிலாக நமக்கு கிருஷ்ண பகவான் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக தர்மத்தை காப்பாற்றி, அதர்மத்தை அழிக்க வேண்டும்என பகவத் கீதையில் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.

ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. இவற்றை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவது, மாபெரும் பாவம். இவை மக்கள் நலனுக்கு எதிரானது. கிருஷ்ணரின் போதனைப்படி நடக்கும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு, ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை, மக்கள் நலனுக்காக மேற்கொண்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், அதனால், கட்டிடங்களை இடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.