இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி டெல்டா மற்றும் ஆல்பா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுவதாக அமெரிக்க சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த பிரேசில், ஈரான், மெக்சிகோ உள்ளிட்ட 16 நாடுகள் அனுமதி வழங்கியிருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து கூடுதல் தடுப்பூசி மருந்துகள் ஏற்றுமதி செய்ய கோரிக்கை வருவதாகவும், மேலும் இந்தியாவுக்கு வெளியே ஒரு தடுப்பூசி மருந்தின் விலை ஆயிரத்து 125 ரூபாய் என விற்பனை செய்து வருவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி டெல்டா மற்றும் ஆல்பா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்த மாதிரிகளை பெற்று 2 ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், இதில், டெல்டா மற்றும் ஆல்பா வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.







