ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குவிண்டன் டிகாக்கும் களமிறங்கினர். டிகாக் 2 ரன்களுடன் வெளியேற, அரை சதத்தை நோக்கி முன்னேறிய ரோகித் சர்மா, 44 ரன்களுடன் வெளியேறினார். இஷான் கிஷன் 26 ரன்கள் எடுத்து பவுல்ட் ஆனார். பின்னர், 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
138 ரன்கள் என்ற இலக்குடன், டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ப்ரித்வீஷா 7 ரன்களில் வெளியேற, ஷிகர் தவான் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்கள் சேர்த்தார். முடிவில், டெல்லி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.







