டெல்லி மற்றும் மகாராஷ்டிராவிலும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதனால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் உத்தர பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லி மற்றும மும்பையில் தற்போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சமீபத்தில் உயிரிழந்த மாடுகள், வாத்துகளின் ரத்த பரிசோதனையில் அவற்றில் 8 மாதிரிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதே போல 3 நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் உள்ள முரம்பா கிராமத்தில் 800 கோழிகள் உயிரிழந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது பறவை காய்ச்சல் ஏற்பட்டு அவை உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கிராமத்திலும் அதனை சுற்றி 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பகுதிகளிலும் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ளவர்களின் உடல்நிலையை கண்காணிக்கும் பணியும் தொடங்கியுள்ளது. பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கெனவே கொரோனா தொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பறவை காய்ச்சல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதன் பரவலை தடுக்க அந்தந்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.