#Delhi | மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக்கொலை!

டெல்லி மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள நீமா மருத்துவமனைக்கு நேற்று (அக். 3) நள்ளிரவில் இரண்டு பேர் விபத்து ஏற்பட்டதாக…

டெல்லி மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள நீமா மருத்துவமனைக்கு நேற்று (அக். 3) நள்ளிரவில் இரண்டு பேர் விபத்து ஏற்பட்டதாக காயங்களுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவர் ஜாவேத்தை சந்திக்க வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் அவரது அறைக்கு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து மருத்துவர் ஜாவேத்தின் அறைக்குள் நுழைந்தவுடன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இருவரும் தப்பி ஓடியதாக மருத்துவமனை ஊழியர்கள் முதல் கட்டத் தகவலை பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து நீமா மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது, “இரண்டு சிறுவர்களும் முதலுதவிக்காக மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் டாக்டர் ஜாவேத்தை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவரது கேபினுக்குள் அவர்கள் சென்றதும், மருத்துவரை சுட்டுவிட்டு, அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்” இவ்வாறு தெரிவித்தனர்.

மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து டெல்லி போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அண்மையில், கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்ற பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது. இரண்டு மாதங்களாக மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், ட்எல்லியில் மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.