மக்களவையில் காரசார விவாதம் – காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய் முன்வைத்த 3 கேள்விகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி கோகாய் 3 முக்கிய கேள்விகளை முன் வைத்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று…

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி கோகாய் 3 முக்கிய கேள்விகளை முன் வைத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பியதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது.

 

இதனால் அவையில் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மீண்டும் அவைக்கு வருவேன் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, திமுக எம்பி கனிமொழி, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை அவைக்கு மீண்டும் வருமாறு கோரிக்கை வைத்தனர்.

இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் மோடி பதிலளிக்காத நிலையில், பாஜக அரசுக்கு எதிராக, மக்களவையில் ஜூலை 26 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது.

இத்தீர்மானத்திற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள ராகுல்காந்தி , எதிர்க்கட்சிகள் சார்பில் உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பகல் 12 மணிக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய் விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் மூன்று முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.

1. மணிப்பூர் வன்முறை பற்றி எரிந்து கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி இதுவரை ஏன் மணிப்பூர் செல்லவில்லை?

2. மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் 80 நாட்களுக்கு  பிறகே பதில் அளித்தார்? அந்த பதிலும் வெறுமனே 30 வினாடிகள் மட்டுமே இருந்தன.

3. மணிப்பூர் வன்முறை தொடர்பாக மாநில முதலமைச்சர் பைரன் சிங்கை பிரதமர் மோடி பதவியிலிருந்து நீக்காதது ஏன்?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.