சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை, அச்சங்குளம் பகுதியில் இயங்கி வந்தது. இந்த ஆலையில்…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை, அச்சங்குளம் பகுதியில் இயங்கி வந்தது. இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் பட்டாசுகளுக்கு வெடிமருந்து நிரப்பும் வேலை செய்தபோது, உராய்வு ஏற்பட்டு தீப்பொறி பரவி, வெடிவிபத்து நேரிட்டது. மளமளவென்று பரவிய தீ, அடுத்துள்ள 6 அறைகளுக்கும் பரவியுள்ளது. இதில் மாரியம்மாள் என்ற பெண் உள்பட 11 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமுற்ற 34 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கர்ப்பிணி கற்பகவள்ளி, ரவிசந்திரன், கண்ணன் உட்பட 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து, அங்கு விரைந்து சென்ற சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், நேரில் ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்தில், மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் பார்வையிட்டு, வெடிவிபத்து குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இதனையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, போர்மேன், குத்தகைதாரர் ஆகிய 3 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, இந்த விபத்து குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் பிரதமரின் நிவாரண நிதியும், படுகாயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும், எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply