சென்னையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைகாலமாக விசாரணை கைதி மரணம் என்பது நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், பேசு பொருளாகவும் மாறியது. அந்த சுவடு அழிவதற்கு முன்பே மீண்டும் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், உடல் நிலை பாதித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜசேகரன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜசேகரன் உண்மையிலேயே உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்தாரா? அல்லது விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தாரா? என்பது காவல்துறையின் உயரதிகாரிகள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ராஜசேகர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
– இரா.நம்பிராஜன்