மது அருந்திவிட்டு மனைவியை தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் வினோத் காம்ப்ளி. இவர் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் ஆவார். வினோத் தன் மனைவி ஆண்ட்ரியாவுடன் மும்பையில் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு வினோத் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து தன் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, அங்கிருந்த மகன் அவரை தடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கட்டுப்பாட்டை இழந்த வினோத், சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த பாத்திரத்தை எடுத்து ஆண்ட்ரியா தலையில் வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆண்ட்ரியா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். பிறகு காவல்நிலையம் சென்று வினோத் காம்ப்ளி மீது புகார் அளித்துள்ளார். அதில், “மதுபோதையில் வீட்டுக்கு வந்தவர், திடீரென்று என்னையும், மகனையும் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கினார். காரணமே இல்லாமல், குழந்தைகள் முன்பு இப்படி நடந்து கொள்ளாதே என்று கூறியும் கேட்கவில்லை.
சமையல் பாத்திரத்தை தூக்கி எறிந்தவுடன், மீண்டும் கிரிக்கெட் பேட்டால் அடிக்க முயன்றார். அதற்கு நாங்கள் அங்கிருந்து தப்பிவிட்டோம்.” என்று கூறியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வினோத் காம்ப்ளி மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மனும் அனுப்பியுள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காம்ப்ளி சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. கடந்தாண்டு இதேபோல, தங்கள் வீட்டில் அருகே வசித்து வந்தவர்கள், வாட்ச் மேன் உள்ளிட்டோருடன் பிரச்னை செய்ததற்காக மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
-ம.பவித்ரா