மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்காலத்தடை விதிக்க கோரிய மனுவில் உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமன்னன் திரைப்படம் வெளியீடு தொடர்பாக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ம் ஆண்டு துவங்கி தற்போது 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏஞ்சல் படத்திற்காக இதுவரை ரூ.13 கோடி செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்ய முடியாததால், தனக்கு 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் இன்று விசாரணைக்கு வந்த போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, ஜூன் 28ம் தேதிக்குள் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.