ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ளத் தயார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை சோலை அழகுபுரத்தில் அரசு சார்பில் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில், தாலிக்கு தங்கம், வீட்டு மனைப் பட்டா உள்ளிட்டவற்றை 644 பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடுகு அளவு கூட ஊழல் நடைபெறவில்லை எனக் கூறிய செல்லூர் ராஜு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ள தயார் என்றும் தெரிவித்தார்.







