அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சிஅமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சவுக் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அடுத்த மாதம் 2, 3 தேதிகளில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள்.
அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட பாஜக தேசிய பொதுச் செயலாளரும் கட்சியின் தெலங்கானா பொறுப்பாளருமான தருண் சவுக், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து தேசிய செயற்குழுவில் ஆலோசிக்கப்படும் என்றார்.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி மேற்கொள்ளும் என்று குறிப்பிட்ட தருண் சவுக், தெலங்கானா வெற்றி கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
தேசிய செயற்குழுவின் முடிவில் ஜூலை 3ம் தேதி ஹைதராபாத்தின் பரேட் மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சி நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டிய தருண் சவுக், மத்திய அரசு குறைத்த பிறகும் பெட்ரோல், டீசல் விலைகளை மாநில அரசு குறைக்கவில்லை என குறிப்பிட்டார்.
தெலங்கானா ராஷ்ட்ர சமிதி அரசின் பதவிக் காலம் இன்னும் 529 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தெரிவித்த தருண் சவுக், வரும் சட்டமன்றத் தேர்தலில் சந்திர சேகர ராவ் வெற்றிபெற மாட்டார் என்றார்.
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது பாஜகதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.









