கொரோனா காலத்தில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா காலம் என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு துயரமான, இடர்பாடான காலகட்டமாகவே அமைந்தது. வீட்டிலேயே மக்கள் முடங்கிக் கிடந்ததால் வருமானத்திற்கு வழியின்றி அவதியுற்றனர். சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன, ஆயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோனது, சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 35 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஆக்ஸ்பாம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே சமயம் 84 சதவிகித குடும்பங்கள் வருவாய் இழப்பினால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின. 2020 ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.7 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் “பாகுபாடு காட்டிய வைரஸ்” ( The Inequality Virus) என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கையை ஆக்ஸ்பாம் நிறுவனம் சமர்பித்துள்ளது. அதில், இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து மட்டும் 35 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த வருமானத்தை 13.8 கோடி ஏழை மக்களுக்கு தலா 94,045 ரூபாயாக பகிர்ந்து அளித்திருக்கலாம் என தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி உலகத்தின் 4ஆவது மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்தார். ஆனால், சிறிய எச்சரிக்கை கூட இல்லாமல் உடனடியாக அமலுக்கு வந்த பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இழந்து, சொந்த ஊருக்கு திரும்ப வழியில்லாமல் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகினர். பேருந்துகள் இயக்கப்படாததால் பல நூறு கி.மீ தொலைவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு நடந்தே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.