தமிழ்நாட்டில், புதிதாக 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல், அரசின் தீவிர நடவடிக்கையால் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், கொரோனாவுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தொற்று வேகம் சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,893 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில், 1,930 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25 லட்சத்து 24 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 128 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் 224 பேருக்கும் ஈரோட்டில் 169 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 3 பேருக்கும் தென்காசியில் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.









