கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்த உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்திய அளவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இதுவரை நாடுமுழுவதும் 1,47,88.109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,77,150 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 9,80,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13,071 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 9ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், பலனளிக்காததால் அவர் மரணமடைந்தார்.







