இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேலும் புதிதாக 16,561ஆக தொற்று அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,42,23,557ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,23,535 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 928ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 18,053 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரத்து 094ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,07,47,19,034 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 17,72,441 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா