பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு தமிழ்நாடு பட்ஜெட்டில் இன்று வெளியானது.
கடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக, கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது முதலே இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன. மேலும், இது தொடர்பான அறிவிப்பை குடும்பத் தலைவிகளும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அண்மையில் ஈரோட்டில் நடந்து இடைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகும்’ என அறிவித்தார்.
ஈரோட்டில் பிப்ரவரி 25-ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்க மாட்டோம் கண்டிப்பாக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த நிலையில், இன்றைய பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அவர் அறிவித்தார். மேலும், இத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்….
யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்?
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், PHH-AYY, PHH, NPHH ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த உரிமைத் தொகை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்கல்வி பயிலும் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கினாலும், அவர்களின் தாயார்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உரிமைத் தொகை அளிக்கப்படும்.
முதியோர் உதவித் தொகை பெற்றாலும், இந்த திட்டம் கூறும் தகுதிகள் இருப்பின் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்காது?
வருமானவரி செலுத்துவோர், சொந்த வீடு வைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது என தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் தொடர்பான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.