புதுச்சேரி காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் ஒரு பிரிவாகவும், இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசுக் கொறடா அனந்தராமன் ஆகியோர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அண்மைச் செய்தி: ‘இந்திய எ அணியைத் தலைமை ஏற்கும் இளம் நட்சத்திரம் சுப்மன் கில்?’
இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்ரமணியன் உட்படக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தில் ஒரு தரப்பினர் மாநில தலைவரின் பதவிக் காலம் முடிந்து விட்டதால் அவரை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூச்சலில் ஈடுபட்டதால் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார். இதனைத்தொடர்ந்து மாநில தலைவரை மாற்ற வலியுறுத்தி நாராயணசாமிக்கு எதிரான தரப்பினர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து கூட்டம் முடிந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவை கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது, மாநில தலைவர் வாகனத்தில் ஏறிப் புறப்பட முயன்ற மேலிடப் பொறுப்பாளரைக் கட்சியினர் போக விடாமல் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.








