அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.
ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
A 7 member delegation of @INCIndia led by @LoPIndia including 2 CMs met Hon’ble President to submit 2 memoranda:
1.Urge govt to withdraw Agnipath scheme, hold wide consultations, & address issues of quality, efficiency & economy,without compromising on welfare of Armed Forces 1/2 pic.twitter.com/b59skWwgwx— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 20, 2022
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிக அர்ஜூன கார்கே, மக்களவை தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் அடங்கிய குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் கேள்வியெழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியின் போது கட்சியின் எம்.பிக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் விவகாரம் குறித்து முறையிட்டனர்.
அதேபோல நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருவதால் அக்னிபாத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் ஒற்றுமை பேரணியை காங்கிரஸ் எம்.பிக்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “டெல்லி காவல்துறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்திய தாக்குல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் குடியரசுத் தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்” என்று கூறியுனார்.









