விடுதலை சிறுத்தைகள் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற பெயரில் திருச்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் மாநாடு நடைபெறும் என அக்கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது 61 வது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
“அகில இந்திய அளவில் இன்று பாஜக தனிமைப்பட்டு நிற்கிறது. 26 கட்சிகள் ஒன்றிணைத்து ஜனநாயக சக்தியாக சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியாக சேர்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கனவு நனவாகிறது என்று பெருமைப்படுகிறேன்.
இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருப்பது மகிழ்ச்சி. வரும் 31 மற்றும் செப்டம்பர் மீண்டும் மும்பையில் இந்தியா கூட்டணி கட்சிகள் கூடவுள்ளன. எங்கள் முயற்சி வெற்றிகரமாக கை கூடி உள்ளது. வரும் தேர்தலில் பாஜகவை ஆட்சி பீடத்தில் இருந்து அப்புறப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவும் பெரும்பான்மை இந்து மக்களாலேயே பாஜக ஆட்சி தூக்கி எறியப்பட்டு நாடும் மக்களும் அரசமைப்பு சட்டமும் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன்.
இந்த கருத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் என் மணி விழா நிறைவு மாநாடு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் திருச்சிராப்பள்ளியில் “வெல்லும் ஜனநாயகம்” என்ற பெயரில் மாபெரும் மாநாட்டை நடத்த உள்ளோம். இதில் தமிழக முதலமைச்சர் தலைமையில், தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் தேசிய தலைவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளோம்.
இந்த பிறந்தநாளை ஜனநாயக சக்திகளை ஐக்கியப் படுத்தும் உறுதிமொழி ஏற்கும் நாளாக கருதுகிறோம். அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் சனாதன சக்திகளை விரட்டி அடிக்க உறுதி ஏற்க வேண்டும் என்றும் அணி திரள வேண்டும்” என்று அரை கூவல் விடுக்கிறேன்” என திருமாவளவன் தெரிவித்தார்.