தமிழக அரசு மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்து மக்களை விபத்தில் இருந்து காக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகரில் கடந்த சில மாதங்களாக மழைநீர் வடிகால் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் அவை முழுமை பெறாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது. அவை மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை வாழ் மக்களும் , அண்டை மாவட்டங்களில் இருந்தும், ஆடை ஆபரணங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்க பொதுமக்கள் சென்னைக்கு வருகின்றனர். சென்னையில் தற்பொழுது நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மழைநீர் வடிகால் பணியில் பல்வேறு இடங்களில் இரும்பு கம்பிகள் நீட்டிக்கொண்டு பணி முடிவு பெறாமல் இருப்பது பார்ப்போரை பயத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் மக்களின் போக்குவரத்து , அனைத்து பகுதிகளிலும் அதிகரித்துள்ளது . இந்நிலையில் சிறிய மழை பெய்தாலும் தேங்கியுள்ள மழைநீரில், பயத்தினால் வாகனத்தை இயக்குவதற்கு மக்கள் தயங்குவதால் வெகுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .
இதனால் சாலை போக்குவரத்திலேயே பல மணி நேரம் வீணாகிறது. வடிகால் பணி நடைபெறுவதால் சாலைகள் சேறும் சகதியுமாக இருக்கும் இடங்களில், வாகனங்கள் வழுக்கி விபத்து ஏற்படவும், அதனால் உயர்சேதம் ஏற்படவும் மிகுந்த வாய்ப்புள்ளது .
ஆகவே விபத்தால் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க , மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதிகமான மழையின் போது மக்கள் இயல்பு வாழ்கை பாதிக்காமல் இருக்க வேண்டும். அவற்றிற்கு தமிழக அரசும் , சென்னை பெருநகர மாநகராட்சியும் துரிதமாக செயல்பட்டு மழைநீர் வடிகால் பணியையும் , துண்டுதுண்டாக நிற்கும் பணியையும் முழுமையாக முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







