“வளர்ச்சிக்கு காலனிய மனநிலையை உடைத்தெறிய வேண்டும்” பிரதமர் மோடி

“நாட்டின் வளர்ச்சிக்கு காலனிய மனநிலையை உடைத்தெறிய வேண்டும்.” என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் உச்சநீதிமன்றம் சார்பில் அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி,…

“நாட்டின் வளர்ச்சிக்கு காலனிய மனநிலையை உடைத்தெறிய வேண்டும்.” என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் உச்சநீதிமன்றம் சார்பில் அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, “நாட்டின் வளர்ச்சிக்கு காலனிய மனநிலையை உடைத்தெறிய வேண்டும்.” என்று கூறினார்.

முன்னதாக பேசிய மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “உச்சநீதிமன்றத்தின் பளுவை குறைக்க நாட்டின் பல பகுதிகளிலும் நீதிமன்ற கிளைகளை ஏற்படுத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,

“உச்சநீதிமன்றம் தனது வழக்கு விசாரணை எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளது. அது வெறும் அரசியல் சாசன நீதிமன்றம் அல்ல. அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்யும் நீதிமன்றமாக தற்போது உள்ளது.”

“எனவே உச்சநீதிமன்றத்தின் வேலை பளுவை குறைக்க வேண்டும். அதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் உச்சநீதிமன்ற கிளை உருவாக்கப்பட வேண்டும். 5 நீதிபதிகளை கொண்ட 3 அரசியல் சாசன அமர்வு விவகாரங்களை விசாரிக்க நிரந்தரமாக அமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு உருவாக்கும் போதுதான் விரைந்து வழக்குகள் முடிந்து. நீதி கிடைக்கும். தற்போதைய நீதிமன்ற கட்டமைப்பின் மூலம், பல வழக்குகளில் நீதி வழங்கும் காலம் மிகவும் அதிக ஆண்டுகளாக உள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் ஒட்டு மொத்த கட்டமைப்பையும் மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டதாக நினைக்கிறேன்.” என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நிலுவை வழக்குகளின் எண்ணிக்கைகளை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றங்களின் வசதிகள், கட்டமைப்புகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுக்கள் வழங்கும் பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

ஊடகங்களில் நீதித்துறை மீதான அவதூறு தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புதல் உள்ளிட்டவற்றை விசாரணை அமைப்புகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலியிடங்களை விரைவாக நிரப்ப கொலிஜியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் இருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.” என்று கூறினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய அரசியலமைப்பு சட்டம் எவரையும் வேறுபடுத்துவதில்லை மாறாக அனைவரையும் சமமாகவே பார்க்கிறது

அரசின் நடவடிக்கைகளால் நாட்டின் விவசாயிகள் வாழ்வு மேம்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை நோக்கியே அரசு செயல்பட்டு வருகிறது.

‘காலனிய மனநிலை’ வளர்ச்சிக்கு தடையானது. அதை நாம் உடைத்தெறிய வேண்டும். அதற்கு உறுதுணையாக இருப்பது அரசியல் சாசனம். அதேபோல அரசும், நீதித்துறையும் அரசியல் சாசனம் என்ற ஒரே கருவறையில் பிறந்த இரட்டை குழந்தைகள். இரண்டும் வேறு வேறு பாதையில் இருந்தாலும் , ஒன்றன்மீது ஒன்று மதிப்பு வைத்துள்ளது.” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.