கொலம்பியா : விமான விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

கொலம்பியா விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலம்பியா – வெனிசுவேலா எல்லையில் உள்ள குக்குட்டா நகரிலிருந்து ஒகானாவுக்கு கொலம்பியா அரசின் விமான நிறுவனமான சதேனா நேற்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 13 பயணிகளும், 2 விமானிகளும் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் ஒகானாவில் விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன் விமானத்துடனான தொடர்பை கட்டுப்பாட்டு மையம் இழந்துள்ளது. இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பகுதியில் விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டின் விமானப் படை ஈடுபட்டு வந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாகவும், பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் கொலம்பியா எம்.பி டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் வருகின்ற கொலம்பியா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள கார்லோஸ் சல்செடோ உள்ளிட்டோர் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான குக்கூட்டா மலைப் பகுதியானது, வானிலை மாற்றத்தை கணிக்க முடியாத வகையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும் தன்மைக் கொண்ட பகுதியாகும். இந்த பகுதியை கொலம்பியாவின் தேசிய விடுதலை ராணுவப் படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.