கல்லூரிக் கட்டணம் – கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாணவி

களக்காடு அருகே கல்லூரிக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள…

களக்காடு அருகே கல்லூரிக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தைச்
சேர்ந்தவர் முத்துக்குமார் (53). தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18) களக்காட்டில் உள்ள பள்ளியில் 12ம்
வகுப்பு படித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து, பட்டப்படிப்பு படிக்க ஆர்வம்
ஏற்பட்டதால் நெல்லை பொன்னாக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்தார். அங்கு அவருக்கு கல்லூரியில் சேர இடமும் கிடைத்தது.

இதையடுத்து, கல்லூரியில் செமஸ்டர் கட்டணம் ரூ. 12 ஆயிரம் செலுத்த
முடியாமல் முத்துக்குமார் திணறினார். எனினும் இரண்டு தவனைகளாக பணத்தை
செலுத்தினார். அவர் கூலி தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்குப் போதிய பணம்
இன்றி தவித்துள்ளார். இருந்த போதிலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு
பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாகக் கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக
பெற்றோர்கள் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி பாப்பா மன வேதனை
அடைந்தார். இதற்கிடையே நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன்
களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது வீட்டு கதவை
உள்புறமாக பூட்டிவிட்டு பாப்பா துப்பட்டாவால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும் அவரது
மனைவியும் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். கதவை
குச்சியால் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் சடலமாகக் கிடந்ததைக்
கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி களக்காடு போலீஸாருக்கு தகவல்
கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீஸார் சம்பவ
இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும், பாப்பாவின்
கைப்பையை சோதனையிட்டபோது அதில் அவர் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், எனக்காக மத்தவங்க கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியல, எனக்கு காலேஜ் பீஸ் கட்ட எங்க அப்பா, அம்மா கஷ்டப்படுறாங்க, மற்றவங்கள கஷ்டப்படுத்தக் கூடாது என்று தான் இந்த முடிவு. என் சாவில் மர்மம் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த லெட்டர். எனது உயிரிழப்புக்கு வேறு எதுவும் காரணமில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கல்லூரிக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.