கோவை கார் வெடிப்பு விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பது தான் பொருத்தமானது, சரியானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
சென்னை அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தை மறுசீரமைப்பு செய்து அங்கு அம்பேத்கரின் முழு உருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் கோரிக்கையை ஏற்று அண்ணல் அம்பேத்கரின் மணிமண்டபத்தை மறுசீரமைத்தும், 13 அடி உயர அம்பேத்கரின் முழு உருவ சிலையை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சார்பில் நெஞ்சார்ந்த நன்றி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சனாதனம் நிறைந்த பழைய இந்தியாவை தகர்த்து எறிந்து விட்டு சமத்துவம் நிலவும்
புதிய இந்தியாவை கட்டமைப்பது அம்பேத்கரின் கனவு. அதை நிறைவேற்றும் வகையில்
திமுகவுடன் ஜனநாயக சக்திகள் இணைந்து களத்தில் இறங்கி இருப்பது பாராட்டுதற்குரியது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதை முனையிலேயே
கிள்ளி எறிய வேண்டும். இந்த விவகாரத்தில் பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக்கும் என காவல்துறை அஞ்சுகிறது. எனவே இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதே சரியானது, பொருத்தமானது. ஆனால், தேசிய புலனாய்வு முகமை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை
கையிலெடுப்பது ஏற்புடையது அல்ல. இத்தகைய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை கையிலெடுத்திருக்கும் நிலையில்,
பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பாஜக கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும்.
இந்த சம்பவத்தை வைத்து ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் இயக்கங்களையும் தொடர்புபடுத்திவிட முடியாது. ஒரு சில தனி நபர்களுக்கு பயங்கரவாத தொடர்பு இருக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்களே
தெரிவித்துள்ளது. தமிழ் மொழிக்காக பாஜக நடத்தும் போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.