கோவை மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி 10 வயது சிறுமி காணாமல் போனார். இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதற்கிடையில், கண்ணம் பாளையம் செல்லும் வழியில் குளக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, பெற்றோரும், உறவினர்களும் சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி சூலூர் காவல் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை – திருச்சி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது.
தீவிரமான விசாரணை மேற்கொண்ட போலிசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்தி (33) என்ற இளைஞர், சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கி இருந்த கார்த்தியை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும், இதற்கு அவரது நண்பர் மோகன் (30) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழலில் சூலூரில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் பார்த்திபன், சம்பத்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். போக்சோ நீதிமன்றம் சார்பில் ரூபாய் 7 லட்சம் காசோலையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
மேலும் முதலமைச்சர் விஜய், இறந்த சிறுமியின் பாட்டி பத்மினியிடம் செல் போனில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.







