பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் மட்டும் போதாது…. சிறந்த வியூகத்தை வகுக்க வேண்டும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாா் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த ஆலோசனை கூட்டம் ஜூலை 17, 18ஆம் தேதிகளில் பெங்களுரூவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் பீகார் மாநிலம் சஸ்திபூரில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் நெருக்கடி நிலை அமல்பட்டதால் தான் ஜனதா கட்சி உருவானது. மிகபெரிய மக்கள் இயக்கத்தை சுதந்திரப் போராட்ட வீரா் ஜெயபிரகாஷ் நாராயண் நடத்தினாா். புதிய அரசியல் மாற்றம் உருவானது. அதேபோல் அரசியல் மாற்றத்தில் போபர்ஸ் ஊழல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
எனவே எதிர்கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் மட்டும் மக்களின் ஆதரவை பெற முடியாது. ஆளும் கட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் வகையில் சிறந்த வியூகத்தை வகுக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் நடந்தது சரியா இல்லையா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவதால் எந்த கட்சியும் ஆதரவை இழக்காது என்றும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.