கூட்டுறவுத்துறை மிகவும் முக்கியம் வாய்ந்த துறை என்றும், மக்களின் உயிர்நாடி என்றும் அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சொசைட்டி மூலம் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு துறை மிகவும் முக்கியம் வாய்ந்த துறை என்றும் மக்களின் உயிர்நாடி என்றும் கூறினார்.
நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள், 47 கூட்டுறவு வங்கி மற்றும் நகர்ப்புற வங்கிகள் இருக்கின்றன. கூட்டுறவு வங்கிகளில் மற்றும் 66 ஆயிரம் கோடிக்கு மேல் வைப்புத் தொகை வைத்திருக்கிறார்கள். 40 ஆயிரம் கோடி நகைக் கடன் மற்றும் பத்தாயிரம் கோடி விவசாய கடன் என கூட்டுறவு வங்கியின் மூலமாக நாம் அளித்து வருகிறோம் என்றார்.
அமெரிக்காவில் செவன் லெவன் ஸ்டோர்ஸ் உள்ளது போல் பொதுமக்கள் நம்பக்கூடிய காமதேனுவை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். நவீனமயமாக அனைத்து ரேசன் கடைகளையும் மாற்றுவதற்கு இரண்டு மூன்று வகையில் சவால்கள் உள்ளன. அடுத்த மூன்று மாதங்களில் படிப்படியாக ரேஷன் கடைகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
35 ஆயிரம் கடைகளையும் ஒரே அடியாக மாற்றி அமைப்பது கடினம் என்பதால், படிப்படியாக ரேஷன் கடைகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். ரேஷன் கடைகளில் வரும் பொது மக்களுக்கு பணம் கொடுத்து பொருட்களை வாங்க பணியாளர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
பொதுமக்கள் தானாக முன்வந்து வாங்குவதற்கான விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டுமே தவிர மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் ரேஷன் பொருள் தவிர்த்து மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








