அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடுவார்கள், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, லைட்ஹவுஸ் ரவுண்டானா அருகே, அதிமுக சார்பில் நிறுவப்பட்ட அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளை திறந்து வைத்தார். தொடர்ந்து 100 அடி உயரம் உள்ள கம்பத்தில் அதிமுக கொடியினை ஏற்றி வைத்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி சிலையை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொய் குற்றச்சாட்டுகளை கூறி ஆட்சிக்கு வரத் துடிக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு நிறைவேறாது என குறிப்பிட்டார். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும் எனக்கூறிய அவர், தான் முதலமைச்சர் இல்லை, மக்கள் தான் முதலமைச்சர் என்று கூறினார். செந்தில் பாலாஜிக்கு விலாசம் கொடுத்த கட்சி அதிமுக. அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள், முகவரி இல்லாமல் போய் விடுவார்கள் என விமர்சனம் செய்தார். மேலும், தமிழக மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அதிமுக அரசே காரணம் என்று குறிப்பிட்டார்.







