உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் அந்தக் கூட்டமைப்பின் தலைவராக தற்போது அந்த பதவியை வகிக்கும் அர்க்கடி துவார்கோவிச் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சதுரங்க உலகின் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தும் வெற்றிபெற்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆகியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர். அவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஆகியிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தமிழ்நாட்டிற்கே பெருமையான தருணம் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கிராண்ட் மாஸ்டர் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும் பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்க்கடி துவார்கோவிச்சுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சுமுகமாக நடத்துவதில் அவரது பங்கு இன்றியமையாதது என்றும், தலைவராக அவரது முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததைப்போல இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என நம்புவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.