மேக வெடிப்பு வெளிநாட்டு சதியாக இருக்கலாம்-முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவில் மேக வெடிப்பு வெளிநாட்டின் சதியாக இருக்கலாம் என்று அந்த மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்  சந்தேகம் தெரிவித்தார். தெலங்கானாவின் பத்ராசலம் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோதாவரி…

தெலங்கானாவில் மேக வெடிப்பு வெளிநாட்டின் சதியாக இருக்கலாம் என்று அந்த மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்  சந்தேகம் தெரிவித்தார்.

தெலங்கானாவின் பத்ராசலம் நகரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோதாவரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு மேக வெடிப்புதான் காரணமாக இருக்கிறது. இந்தியாவில் பல பகுதிகளில் மேக வெடிப்புகள் நிகழ்ந்து வருகிறது. இது வெளிநாட்டின் சதியாக இருக்கும் என்று சந்தேகம் எழுகிறது.

பருவநிலை மாற்றத்திற்கு இடைவிடாத மழையும் காரணமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டை சீர்குலைக்க இந்த மேக வெடிப்புகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அது உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை என்றார் சந்திரசேகர் ராவ்.

மேக வெடிப்பு என்பது குறிப்பிட்ட நேரத்தில் இடைவிடாமல் மிக அதிக அளவு மழைப் பொழிவு நேரிடுவது ஆகும். சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களிலும் மேக வெடிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.