மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணைக்கு அனுமதி வழங்க கோரி மத்திய அரசை வலியுறுத்த டெல்லி செல்லவிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஓராண்டிற்குள் தேர்தல் வரவுள்ளதால், மேகதாது அணை திட்டத்தில் ஏதேனும் சில மாற்றங்களைச் செய்து, மத்திய அரசின் அனுமதியைப் பெற்று அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க, கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் நோக்கத்தை புரிந்து கொண்டு, அவற்றை முறியடிப்பதற்கான பதில் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அதற்கான உத்திகளை வகுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு விரைவில் கூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த நோக்கத்திற்காகவும், எந்த விதமான அணையும் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்றும், பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவினர் நேரில் வலியுறுத்த வேண்டும் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.