பாபநாசம் அருள்மிகு பாபநாசர் சமேத ஸ்ரீஉலகம்மை அம்பாள் திருக்கோயிலில் சித்திரை திருநாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மை சமேத பாபநாச நாதர் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இக்கோயில் நவ கைலாயத்தில் முதலாவது தலமாக சூரியனுக்கு அதிபதியாக விளங்குகிறது. இக்கோயிலில் அம்மன் சன்னதி முன்பு உரலில் மஞ்சளை இடித்து பெண்கள் நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் இட்டுக்கொள்ளும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தாண்டு சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதலில் கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும் கொடிமரத்திற்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் தீபாராதணை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு ஆசி அளித்து பத்தாம் நாள் சுவாமி மற்றும் அம்பாள் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
—அனகா காளமேகன்







