பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இரண்டு
ஆண்டுகளுக்கு பின்னர் சித்திரை தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது –
பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்தில் தத்தளித்தபடி நம்பெருமாள் வீதிகளில் வலம் வந்தார்.
108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம், அரங்கநாதர் கோயிலில்
ஆண்டுதோறும் மூன்று தேர் திருவிழாக்கள், மற்றும் மாசி தெப்பம், மார்கழி மாதம் சொர்கவாசல் திறப்பு உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில்
சித்திரை மாத தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா கொரோனோ பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. பின்னர் நாள்தோறும் நம்பெருமாள் கருடவாகனம்,
யாளிவாகளம், யானை வாகனம், தங்ககுதிரை வாகனம், பூந்தேர், கற்பகவிருட்சவாகனம் என பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். எட்டாம் திருநாளான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில்
எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து திருத்தேர் அருகில் வையாளி
கண்டருளினார்.
இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை 6.30 மணிக்கு வெகுவிமர்சையாக தொடங்கியது. கோவிந்தா…ரங்கா…ரங்கா… என்கிற கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிழக்குச் சித்திரை வீதிகளில் புறப்பட்டு, தெற்கு சித்திரை வீதி வழியாக மேற்கு சித்திரை வீதியை அடைந்த திருத்தேர், வடக்குவீதி வழியாக நுழைந்து பின்னர் மீண்டும் கிழக்கு சித்திரை வீதியில் உள்ளநிலையை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி நம்பெருமாள் திருத்தேரில் வலம் வந்ததது பக்தி பரவசமூட்டும் காட்சியாக இருந்தது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தேரோட்டம் விழாவை முன்னிட்டு
திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏராளமான போலீசார் ஸ்ரீரங்கம்
கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் அரங்கநாதரின் திருத்தேரோட்டம் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட்டது. மேலும் கழுகு பார்வையில் பிரத்யேகமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.