தனது பிறந்த நாள் மணி விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை ஊகங்களுக்கும், அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்ல கூடியதாக அமைந்ததாக திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாள், மணி விழாவாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விடிய விடிய
நடைபெற்றது. நடன கலைஞர் கலைமாமணி ஜாகிர் உசேன் குழுவினர் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதை விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதை தொடர்ந்து விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பாடல் வரிகளில் உருவான காவல் தெய்வம் என்னும் தலைப்பிலான திருமாவளவன் குறித்த பாடல் வெளியிடப்பட்டது.
இதே போல், விசிகவை சேர்ந்த பலர் திருமாவளவன் குறித்து உருவாக்கிய பாடல்கள் வெளியிடப்பட்டன. பின்னர் தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் நள்ளிரவில் கருத்தரங்கு நடைபெற்றது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் எம்.பி, தான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். இந்த விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்க உரை. கொள்கை பிரகடனம் அமைந்த உரை. எல்லா ஊகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை சொல்ல கூடிய உரையாக இருந்தது. அதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதேபோல், மணி விழாவுக்கு வருகை தந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தமிழ்நாடு அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வி.கே.சசிகலா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கும் நன்றி கூறினார். இன்றைக்கு சங்பரிவார் என்றால் ஆர்எஸ்எஸ் குடும்பத்தை சேர்ந்த அமைப்புகள், அவர்கள் தான் ஒட்டுமொத்த இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்கிறார்கள். நாம் எதிர்ப்பது இந்துக்களை அல்ல சங்பரிவார்களின் கொள்கைகளை தான் என விளக்கி கூறினார். பாஜக-வின் எதிரி காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் அல்ல. அவர்களின் உண்மையான எதிரி அரசியலமைப்பு சட்டம் தான் என்றார்.
அம்பேத்கரை எதிர்த்தால் அவர்கள் அரசியலில் தனிமைபட்டு விடுவார்கள். அம்பேத்கரை தூக்கி பிடிப்பது போல் அவர்கள் செய்வது நாடக அரசியல். 2ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் இந்த தேசத்தை இழுத்து செல்ல துடிக்கிறார்கள். இந்த தேசத்திற்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து இருக்கிறது. 2 ஆயிரம் ஆண்டுகள் அடிமைத்தனத்தை ஒற்றை மனிதனாய் அம்பேத்கர் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் கொடியாக காவி கொடியை மாற்றிவிட்டால் நம்மால் என்ன செய்ய முடியும்? இதனை எப்படியாவது நாம் தடுத்தே ஆகவேண்டும் என கூறினார்.
சங்கத்துவத்தை வீழ்த்துவோம், சனநாயகத்தை பாதுகாப்போம் என்ற கருத்தை இந்த தேசம் முழுக்க கொண்டு போய் சேர்க்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகளுக்கு
இருக்கிறது. சங்பரிவார்கள் வலிமை பெற வலிமை பெற சனநாயகவாதிகள் நசுக்கப்படுவார்கள். இந்த மணிவிழா ஆண்டில் 5 கருத்தியல் மாநாடு நடத்திட திட்டமிட்டு உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரம் ஊராட்சிகளில் இந்த ஓராண்டில் 50 சதவீதம் அதாவது 6 ஆயிரம் ஊராட்சிகளிலாவது அம்பேத்கர் படிப்பகம் உருவாக்க வேண்டும். மாணவ பருத்தவத்திலேயே எதிர்கால தலைமுறையினர் அம்பேத்கர், பெரியார், மார்க்சு பற்றி அறிந்திட விடுதலை சிறுத்தைகள் சார்பில் நூலகங்களை அமைத்திட வேண்டும் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்