முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு காவல் படையினர் மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த போது மூன்று முக்கிய கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் காங். மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது திமுக பொருளாளரும், மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றார்.







