தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து உரிய நீரைத் திறக்க உத்தரவிட வேண்டும் என ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில், காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ளார். ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே என்றும், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்
ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை என்றும், மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதால், 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பில் உள்ள நீரை பாசனத்திற்குப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே குறுவை சாகுபடி நம்பியுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இயலும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் கடந்த 5-7-2023 அன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சினையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டதை தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ள முதலமைச்சர் , 3-7-2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4-7-2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடுசெய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிட உத்தரவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







