நீலாங்கரையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா தற்போது பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். ராதிகா உள்ளிட்ட பல கதாநாயகிகளைத் தமிழ் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியவர். அண்மையில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக பாரதிராஜா நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் எம் ஜி எம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டார். எம் ஜி எம் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜாவின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மற்றும் அவருக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மருத்துவர்கள் :- பாரதிராஜா மருத்துவமனைக்கு வரும் போது நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மயக்கமான நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தற்பொழுது அவர் மிகவும் நலமுடன் இருக்கிறார் என்றனர். வயது மூப்பின் காரணமாகவே நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டது. சிறிது காலத்துக்கு வீட்டில் பாரதிராஜா ஓய்வு எடுக்க வேண்டும் எனக் கூறினர். மேலும் கூடிய விரைவில் ஷூட்டிங் செல்ல உள்ளார். மிக விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பதாகக் கூறி இருக்கிறார் என்றனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை சென்னை நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
-ம.பவித்ரா








