ஜப்பான் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க என்னனென்ன திட்டங்களை செயல்படுத்த உள்ளார் என்பது குறித்து காணலாம்.
ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ் நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜப்பான் நாட்டில், முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன. இதுவரை ஜப்பான் சென்றுள்ள அரசு குழுக்கள் டோக்கியோ மட்டுமே சென்று வந்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் வசித்து வரும் ஒசாகாவிற்கும் முதலமைச்சர் தலைமையிலான குழு சென்றுள்ளது.
ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ (JETRO) நிறுவனத்துடன் இணைந்து அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார். முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். டோக்கியோ நகரில் அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிஷி முராயசு தோஷி மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனமான ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோவை முதலமைச்சர் இன்று சந்திக்க உள்ளார்.
200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பானில் அமைந்துள்ள மேம்பட்ட தொழில் மையத்தைப் பார்வையிட உள்ளார். அதனைத் தொடர்ந்து கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட உள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
ஒசாகா மாகாணத்தில், முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 53 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குநர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு ஆகியோர் கையொப்பமிட்டனர்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உடனிருந்தனர்.