கொரோனா அச்சத்தால் பயணிகள் வருகை குறைந்து வருவதால் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாக வெளியூர்களுக்கு செல்வோர் தங்கள் பயணங்களை தள்ளி வைத்து வருகின்றனர். பயணிகள் போதிய எண்ணிக்கையில் வராததால் குறைந்த பயணிகளை வைத்து ஆம்னி பேருந்துகளை இயக்குவது நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் அதனால் சேவைகளை குறைத்து வருவதாகவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து 900-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி மாதம் முதல் அந்த எண்ணிக்கை 200-க்கும் கீழ் வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். வருவாய் இழப்பு, வரி, பணியாளர்கள் ஊதியம், ஆகியவற்றை எதிர்கொள்வதால் ஏற்படும் நஷ்டம் காரணமாக, சேவைகளின் எண்ணிக்கையை குறைத்து வருவதாகவும் ஆம்னி பேருந்துகள் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்தனர்.







